அண்ணாவின் ஆக்கங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் திரட்டும் முயற்சி இது

2009-01-31

சொல்லாதது



அவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை, சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆஹா! என்ன மணம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர், முகந்து ரசிக்கவில்லையா? சுந்தரியின் சிறு பிராயமுதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய்விட்டு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம் அப்பெண்ணுக்கு. பள்ளியில் பல நாள் ஆசிரியருக்குக் கோபம், பாடத்திலே அந்தப் பாவை நினைவைச் செலுத்தாததால், அப்படிப்பட்ட மாணவியை, முட்டாள், தடிக்கழுதை, உதைக்கிறேன் பார், என்று எவ்வளவோ வசைமொழி சொல்லலாம். ஆசிரியருக்கு அகராதியா தெரியாது? ஆனால் அவர் ஒரு நாளாவது, சொல்ல வேண்டுமென்று எண்ணியதை சொன்னதேயில்லை. புன்சிரிப்புடன் தலையை அசைப்பார், சுந்தரியின் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டுப்படும், அது ஒரு புதுவிதமான களையைத் தரும். அதை ரசிப்பார் ஆசிரியர். வேறு மாணவியின் காதை இழுப்பார், கன்னத்தைக் கிள்ளுவார், தலையைக் குட்டுவார், சுந்தரி மீது சுடுசொல் வீசமாட்டார், அந்த மலர் வாடி விடுமோ என்று நினைத்து.

"குட்டி பெரியவளானால் மகா ரூபவதியாக இருப்பாள். கண்களே போதும் ஆளை மயக்க, அந்தப் புன்சிரிப்பு இருக்கிறதே, அதுபோல நான் கண்டதேயில்லை. சுருண்டு கருத்து அடர்ந்து, காற்றிலே அலையும் அவளுடைய கூந்தல் இருக்கிறதே, அடடா என்ன நேர்த்தி, இலாவண்யம்" என்று, சுந்தரியின் பாலப்பருவ ரசிகர்கள் சொல்லவில்லையே தவிர, அவ்விதமும், அதற்கு மேலும் நினைக்காதவர்களே கிடையாது.

"சுந்தரி, நாமோ ஏழைகள், விதவிதமான துணிகள் உனக்குக் கிடையாது. நான் ஆப்பம் சுட்டு விற்று அதைக் கொண்டு தானே இரண்டு ஜீவன்கள் வாழ வேண்டும்! உன் தகப்பனோ, எங்கோ தேசாந்திரம் போய்விட்டான். நாம் என்ன செய்யலாமடி கண்ணே! சோற்றுக்கு ஊறுகாய் தான் உனக்கு வறுவல், கூட்டு, வடை எல்லாம்" என்று சுந்தரிக்கு அவளுடைய தாயார் தனபாக்கியவதி சொல்லவில்லை; சுந்தரிக்குத்தான் இது தெரியுமே, அந்த பச்சை மேல்சொக்காயும், பாக்குக் கலர் பாவாடையும், அவளுடைய சிவந்த மேனிக்கு அழகாகத்தான் இருந்தது. பம்பாய் நகர சீமை வாயிலும் அவளுக்கு எதற்கு? அழுமூஞ்சி அலமு, பொட்டைக் கண் பொன்னி, வழுக்கைத் தலை வனிதா, அவர்களுக்கு வேண்டும் இந்த மேனி மினுக்கிகள் என்று தனபாக்கியம் சொல்லவில்லை. ஆப்பம் சுட்டு விற்பவளுக்கு பணக்காரவீட்டுப் பெண்களைக் கேலி செய்யும் உரிமை உண்டா?

சுந்தரியின் வளர்ச்சியும், வீட்டிலே வறுமையின் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று போட்டியிட்டன. இந்த அமளியின் இடையே, அவளுடைய அழகு வளர்ந்தபடி இருந்தது, எதையும் சட்டை செய்யாமல்.

"எனக்கு மட்டும் கொஞ்சம் சொத்து ஒரு சொந்த வீடு இருந்துவிட்டால், என் தங்கத்துக்கு ஏற்றவனாக ஒருவனைத் தேடிப் பிடித்துக் கலியாணம் செய்து வைக்க முடியும். கண்டேன் கண்டேன் என்று கைலாகு கொடுக்க எவரும் சம்மதிப்பார்கள். சுந்தரி, ஆப்பக்கடைகாரியின் பெண்ணாயிற்றே, எந்தத் தடியனோ, வெறியனோ, எவனோ ஒருவனுக்குத்தானே வாழ்க்கைப்பட்டாக வேண்டும்" என்று தனபாக்கியம் சொல்லவில்லை, அவளுடைய கண்ணீர், ஏற்கனவே தூசி நிரம்பிக் கிடந்த தலையணையை மேலும் அதிகமாக அழுக்காக்கி விட்டது.

"அழகான பெண், அடக்கமானவள், ஏதோ கொஞ்சம் படித்தும் இருக்கிறாள். ஏழைதான், இருந்தால் என்ன? நம் வீட்டில் உலாவினாலே போதும் கிருகலட்சுமியாக இருப்பாள். நமது பையனுக்கு ஏற்ற பொருத்தமான பெண் என்ன செய்வது? அவள் ஆப்பக்காரிக்கா பிறக்க வேண்டும்? அரசமரத்தை ஆறு வருஷம் சுற்றியும் பயனில்லாமல், அடுத்த தெருவிலே அழுதுகொண்டிருகிறாளே தாசில்தாரின் சம்சாரம் தில்லை, அவள் வயிற்றிலே பிறந்திருக்கக்கூடாதா? நமது பையனுக்குக் கலியாணம் செய்து கொள்ளலாமே" என்று லோகு முதலி சொல்லவில்லை. மனதிலே! இது போலப் பலமுறை அவர் நினைத்தார்; சொல்லவில்லை வெளியே. லோகு முதலி பணம் படைத்தவர், பெண் இழந்தவர். ஒரே மகன் அவருக்கு. ஒய்யாரமான பையன். அவனுக்குச் சுந்தரியிடம் மையல்.

"கனகு, ஏனப்பா, அடிக்கடி அந்த ஆப்பக்கடைக்கு போய் வருகிறாயாமே, அந்தப் பெண் சுந்தரியை நேசிக்கிறாயாமே" என்றும் லோகு முதலி சொன்னதில்லை. மகனிடம் இதுபோலப் பேசக்கூடாது என்ற சம்பிரதாயத்தினால்.

"எனக்கு என்னமோ அப்பா, அந்த கடைப் பக்கம் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வராவிட்டால், சந்தோஷம் உண்டாவதில்லை. அப்பா சுந்தரியின் அழகு என்னை என்ன பாடுபடுத்துகிறது தெரியுமா? தூக்கமே இருப்பதில்லை. தவறித் தூங்கினாலோ, கனவுதான். கனவிலே அந்த கிளிமொழியால் பிரசன்னமாகிறாள் அப்பா. நான் என் உயிர் போவதானாலும் சுந்தரியைத் தவிர வேறு ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளவே மாட்டேன். சத்தியமாக சொல்கிறேன் அப்பா. சுந்தரிதான் எனக்கு வேண்டும். இல்லாவிட்டால் கலியாணமே வேண்டாம்" என்று கனகசபேசன் சொல்லவில்லை. தந்தையிடம் தனயன் இதுபோலப் பேசுவது தகுமா?

சுந்தரியாவது சொன்னாளா மனதிலே நினைத்ததை. சொல்லவேயில்லை. "அம்மா, கனகு, என்னைக் கண்டதும் ஒரு மாதிரியாகச் சிரிக்கிறான். தண்ணீர் கேட்கிறானே, அப்போது நான் குவளையைக் கொடுக்கும்போது வேண்டுமென்றே என்னைத்தொடுகிறான். என்னைத்தான் கலியாணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறுகிறான். என் காதில் படும்படி " என்று சுந்தரி சொல்லவில்லை. அவள் சொல்வானேன். சுந்தரியைப் போலத் தனபாக்கியமும் வாலிபப் பெண்ணாக இருந்தவள்தானே!

"சுந்தரி உன்னை நான் கட்டாயமாகக் கலியாணம் செய்து கொள்கிறேன். ஏமாற்றிவிடுவேன் என்று எண்ணாதே. ஏழை வீட்டுப் பெண்தானே என்று எங்கள் வீட்டிலே தள்ளிவிடுவார்கள் என்றும் கருதாதே. பார் எப்படியாவது எங்கள் வீட்டாரைச் சரிபடுத்திக் கொண்டு உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன்!"

"என்னையாவது நீங்கள் கலியாணம் செய்து கொள்வதாவது, அறுபது வேலிக்குச் சொந்தக்காரர் உங்கள் அப்பா, நான் ஆப்பக்காரி மகள். என்னையாவது நீங்கள் கலியாணம் முடிப்பதாவது. அதெல்லாம் நடவாத காரியம். ஏன் வீணாக என்னை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்!"

"சுந்தரி, சத்தியம் செய்கிறேன். என்னை நம்பு."

"சத்தியமா? ஆசைக்குக் கண்மண் தெரியாது. அதனாலே பேசுகிறீர்கள் இதுபோல வீணாக என்னைக் கெடுக்க வேண்டாம். நான் ஏழை,"

"எங்கள் விட்டிலே மண்டை உடையக் கூடிய சண்டை நடப்பதானாலும் சரி உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வது என்று நான் தீர்மானித்து விட்டேன்."

"மனக்கோட்டை இது, இடிந்துபோகும். இலுப்பப்பட்டி மிராசுதார் மகள் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல இருக்குதாம்! இருந்தால் என்ன, அவள்தான் உனக்கு நாயகியாக வரப்போகிறவள்...."

"சீ ! அந்தக் குரங்கையா, நான் கலியாணம் செய்து கொள்வேன்?"

இவை சுந்தரிக்கு கனகு சொல்லாதவை. கனகுக்குச் சுந்தரியும் சொன்னதல்ல!

சிலகாலத்துக்குப் பிறகு இலுப்பப்பட்டி மிராசுதாருக்குத் தான் கனகு மருமகனானான்.

"குரங்குபோல் இருக்கிறாயே, உன்னைக் கட்டிக்கொண்டேனே, நான் ஒரு மடையன். அப்பன் மிரட்டினால் என்ன, பிடிவாதமாக இருந்தால், எப்படி நடந்திருக்கும் இந்தக் கலியாணம்? பாழான பணத்தாசை எனக்கும் பிடித்துக் கொண்டதால்தான், நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற சுந்தரியை இழந்துவிட்டேன், இனி உன்னோடு அழவேண்டும். என் விதி! விதி என்ன செய்யும்? என் புத்தியைக் கட்டையால் அடிக்க வேணும்" என்று கனகு சொல்லிக்கொள்ளவில்லை, எண்ணாமலுமில்லை. அவன்தான் என்ன செய்வான் பாவம்! அறுபது வேலிநிலமும் இலுப்பப்பட்டியாரிடம் அடகு இருந்தது. தன்னுடைய அழுமுஞ்சியைக் கனகு கழுத்திலே கட்டிவிட்ட பிறகுதான், வட்டியும் அசலும் செல்லாகி விட்டதாக மிராசுதார் எழுதிக்கொடுக்க இசைந்தார். பட்ட கடனுக்கு இது தண்டனை என்று கனகு நினைத்துக்கொண்டான். சொல்ல முடியுமோ?

தேசாந்திரம் செய்துக் கொண்டிருந்த திருவேங்கடம், "எனக்கு மனைவி உண்டு. ஒரு மகளும் உண்டு. சிவப்பாக இலட்சணமாக இருப்பாள். என் மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு ஏதேதோ பாடுபட்டு, என் மகளை வளர்த்து வருகிறாள். எனக்கு வேலை செய்ய முடிவதில்லை. வீட்டைக் கவனிக்க முடியவில்லை. இப்படி ஊருராக அலைந்து, அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆளாய்ப் பறக்க முடிகிறதே யொழிய வீட்டோ டு இருக்கப் பிடிக்கவில்லை. நான் கட்டியிருப்பது காவிதான். ஆனால் கள்ளச் சாவி கிடைத்தால் போதும், போதைக்குச் சரியான "சான்சு" கிடைத்துவிடும். அது ஒன்றுதான் வாழ்க்கையிலே எனக்கு இருக்கும் திருப்தி" என்று திருவேங்கடம் சொல்லவில்லை. ஆனால் அவன் எண்ணம் அதுதான், சுந்தரியின் பருவ நிலையைப் பற்றியோ, கனகுவின் காதல் விஷயம் பற்றியோ, அந்தக் காதலை அவன் வீட்டு நிர்ப்பந்ததினால் கைவிட வேண்டிநேரிட்டது பற்றியோ, ஊரூராகச் சுற்றிக் கொண்டு ஒய்வுக்கு மடங்களிலே தங்கி, தேர் திருவிழாக் காலங்களிலே, திருப்தியாக வாழ்ந்து வந்த திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை.

கனகுவின் மனைவியானாலே இலுப்பப்பட்டியார் மகள் காவேரி, அவளுக்கு கனகுவோ, வேறு யாரோ சொல்லவில்லை ஆப்பக்கடையக்காரின் மகளிடம் கனகு காதல் கொண்டிருந்த கதையை. எப்படி அவ்வளவு பணக்காரப் பெண்ணிடம் இதைப் பேசுவது என்ற பயத்தால்.

இவ்வளவுதானா, கனகுவின் இஷ்டப்படி சுந்தரி சில வேளைகளில் நடந்து கொண்ட விஷயத்தை யாரும் தனபாக்கியத்துக்குச் சொல்லவில்லை.

"இது ஏன் இந்தப் பெண் இவனோடு இப்படிக் குலாவுகிறாள்" என்று தனபாக்கியம் பல சமயங்களிலே எண்ணினதுண்டு. சொன்னதில்லை. "அடி அம்மா, ஜாக்கிரதை, அவன் அப்படி இப்படி என்று ஏதாகிலும் கெட்ட பேச்சுச் சொன்னால் கேட்காதே. அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி வை" என்றும் சுந்தரிக்கு அவள் தாயார் சொல்லவில்லை. கனகு கெட்டப் பேச்சுப் பேசியிருந்தால் தானே, சுந்தரி அம்மாவிடம் தானாகவாவது சொல்லியிருப்பாள்? அவன் சொன்னதுதான் இவளுக்கு ஆனந்தமாக இருந்ததே கேட்க.

"அம்மா, வாயைக் குமட்டுகிறது. சாதம் பிடிக்கவில்லை. மயக்கமாக இருக்கிறது. என்னமோ போல இருக்கிறது உடம்பு" என்று சுந்தரி சொல்லாமலேயே, தனபாக்கியம் நிலைமையைக் கண்டுகொண்டாள். "ஐயையோ, மோசம் வந்து விட்டதே, அந்தப் பயல் அநியாயமாக ஏதுமறியா என் மகளைக் கெடுத்து விட்டான் போலிருக்கிறதே. நான் என்ன செய்வேன்? ஏழை என்பதற்காகவே இவளை நல்ல இடத்திலே யாரும் கேட்கவில்லை. இப்படியும் நேரிட்டு விட்டால் என் கதி என்னாவது? அடி பாழும் பெண்ணே, இப்படி என் அடிவயிற்றிலே நெருப்பைக் கொட்டினாயே! அவ்வளவு திமிரா உனக்கு? ஆணவமா? கொழுத்துப் போனாயா!" என்றெல்லாம் சொல்லித் தனபாக்கியம் சுந்தரியைக் கண்டிக்கவில்லை. விஷயம் வெளிவந்து விட்டால் விபரீதமாகிவிடுமே என்ற பயத்தால். ஆனால் தனபாக்கியத்தின் பெருமூச்சும், தானாக வழிந்த கண்ணீரும் சுந்தரிக்கு இதைவிட விளக்கமாகத் தாயின் மனோவேதனையைத் தெரிவித்தது.

"தம்பி, ஊரில் உனக்கு உத்தமன் என்று பெயர் இருக்கிறது. நல்ல குணமென்று புகழாதவர்கள் இல்லை. ஏழைகளிடம் இரக்கம் காட்டுகிறாய். இலுப்பப்பட்டி மிராசுதாரரின் இறுமாப்பினால் கஷ்டமடைந்தவர்களை யெல்லாம் உன் கருணையால் காப்பாற்றுகிறாய். இவ்வளவு நல்லவனான உன்னால் என் குடும்பமே பாழாகிவிட்டதே. அதோ சுந்தரி படும் வேதனையைப் பாரடா அப்பா! எந்தப் பாவி கொடுத்த மருந்தும் அதைக் கரைக்கவில்லையே, வளருகிறதே உன்னால் ஏற்பட்ட வம்பு. ஊரார் தூற்றுகிறார்களே, சுந்தரியின் கண்ணீர் என்னைச் சித்திரவதைக்கு ஆளாக்குகிறதே. ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டோ , அப்பனுக்குப் பயந்தோ ஒருவளைக் கலியாணம் செய்துகொண்டாய், உன் அன்பு மொழியை நம்பினாள் இந்த அபலை. இவளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதா இரண்டாந்தாரமாக? இழிவு போகுமே". என்று தனபாக்கியம் கனகனிடம் கூறவில்லை, கூறிப் பார்ப்போம் என்று பல தடவை எண்ணுவாள். எப்படிக் கூறுவது சொல்லிப்பயன் என்ன என்று எண்ணி, ஏங்குவாள்.

"அம்மா கன்னி கருவுற்றால், ஊர் தூற்றும் என்று பயந்து ஓடிவிட்டோ ம், நீ காப்பாற்று" என்று சொல்ல மனம் இடந்தரவில்லை, தனபாக்கியத்துக்கு. ஊரை விட்டு தொலைந்தால் போதும், என்று சுந்தரியை அழைத்துக் கொண்டு வேறு ஊர் வந்து குடி ஏறினாள். சுந்தரிக்குப் பத்தாம் மாதம்! மருத்துவம் பார்க்க வந்த கிழவியிடம், தனபாக்கியம், அபாக்கியவதி சுந்தரியின் அந்தரங்கக் கதையைக் கூறவில்லை. "அவளுடைய புருஷன் அக்கரைக்கு ஓடிவிட்டான்" என்று பொய்யுரைத்தாள். தாலி இருந்தது சுந்தரியின் கழுத்திலே தாய் மகளுக்குக் கட்டிய தாலி!!

தங்க விக்ரஹம் போன்ற குழந்தை பிறந்தது சுந்தரிக்கு. பேரன் பிறந்தது தெரியாமல் பெருமாள் கோவிலிலே பலமான பூஜை நடத்திக் கொண்டிருந்தார் லோகு முதலி.

கலியாணமோ இல்லை, குழந்தையோ தவழ்ந்தது அந்தக் குடிசையிலே! மாளிகையிலே, கனகனும், காவேரியும், கனகபாடிகளின் பூஜை, காளி உபவாசியின் தாயத்து, சித்த வைத்தியரின் செந்தூரம் ஆகியவற்றை நம்பிக் கிடந்தனர், பலனின்றி.

"என் மகன் ராஜகோபால் இருக்கிறான். எனக்கென்ன கவலை!" என்று கனகு யாரிடம் கூறுவான்? எப்படிக் கூறுவான்? விஷயமே அவனுக்குத் தெரியாது? தெரிந்தாலும் கூறமுடியுமா?

"போனவன் திரும்பவில்லையே!" என்று பலர் ஆயாசமும், ஆச்சரியமும் கொண்டு, சுந்தரியைக் கேட்டனர். அக்கறை இல்லை அவருக்கு, ஆகவே அவர் அக்கரையில் இருக்கிறார், என்று சாக்குக் கூறுவது தவிர, வேறு வழியில்லை. விழியிலே நீர் வழிய வழிய வதைப்பட்டுக் கிடந்த அந்த வனிதைக்கு காலம் அவளுடைய கவலையைப் பற்றிய கவலையால் ஓய்ந்து விடுமா? அது ஓடிக்கொண்டே இருந்தது. ஓராண்டு, ஈராண்டு, மூவாண்டு, ஐந்து ஆண்டுகள் கழிந்தன. தாலியுடன் மணமாகாத மங்கை உலவிக் கொண்டிருந்தாள். தகப்பனாரைக் காணாது தத்தி நடக்கும் பருவமடைந்தான் தங்கராஜன், தாய் தங்கமே என்று கொஞ்ச, பாட்டி ராஜா என்று கொஞ்ச, இரண்டு அசை மொழிகளும் திரண்டு, குழந்தைக்கு தங்கராஜன் என்ற பெயராக ஏற்பட்டது. தங்கராஜனின் தகப்பரின் "ராஜ்யம்" "தங்கம்" இரண்டுக்கும் தேய்வு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது, இந்த ஐந்து வருஷங்களிலே! இலுப்பப்பட்டி மிராஸ்தாருக்கு ஒரு வியாஜ்யம். அது முனிசீப்புக்கோர்ட்டிலிருந்து ஹைகோர்ட் சென்றது. இந்தப் பிரயாணச் செலவு மிராஸ்தாரின் தங்க நகைகளை மார்வாடிக்கும், நிலத்தின் முக்கிய பகுதிகளை வேறோர் ஜெமீனுக்கும் கட்டணமாக்கிவிட்டது.

"எந்த வேலையிலே நீ எனக்கு மருமகனாக வந்தாயோ, அன்றே என்னைச் சனி பிடித்துக் கொண்டது. என் முகத்திலே விழிக்காதே. உன்னைக் கண்டாலே எனக்குக் கடுங்கோபம் பிறக்கிறது."

"உனக்கு இவ்வளவோடா நின்றுவிடும் கேடு? நீ படவேண்டியது எவ்வளவோ இருக்கிறது; உன்னுடையப் பணத்திமிரினால், எவ்வளவு ஏழைகளை கண் கலங்கச் செய்திருக்கிறாய்? அதனுடைய பலனை அடைகிறாய். என் மீது கோபித்துக் கொள்கிறாயே. உன் அட்டகாசத்தால் ஊரிலே உனக்குப் பகை. வியாஜ்யம் பிறந்ததும் உன் விரோதிகள் உன்னைத் தீர்த்துக் கட்ட வேலை செய்கிறார்கள். படு, எனக்கென்ன! நான் என்ன செய்வது? உன்னாலே நான் கெட்டேன். என்னாலே அந்தப் பெண் கெட்டுச் சீரழிந்து, எங்கோ போய்விட்டாள். உன் முகத்தைப் பார்க்கும்போதே எனக்கு வருகிற கோபம் கோடாரியையோ, அரிவாளையோ தேடச் செய்கிறது."

மாமனாரும் மருமகனும் சொல்லிக் கொள்ளவில்லையேயொழிய, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் கண்கள் இக்கருத்துக்களையே காட்டின.

கேஸ் தோற்று விட்டது. கஷ்டம் முற்றிவிட்டது. இலுப்பப்பட்டி கைமாறிவிட்டது போலத்தான் - என்று மிராசுதாரர் சொல்லவில்லை. அவருடைய வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல் இவைகள் வேறு என்ன கூறின!!

சீமானின் மருமகனாகிச் சிங்காரமாக வாழ நினைத்த கனகு, சீரழிந்த மிராசு குடும்பத்தைக் காப்பாற்றித் தீர வேண்டிய பொறுப்பைத் தான் பெற்றான். குளிக்கப் போனவன் சேறு பூசிக்கொண்ட கதை போல!

தேசாந்திரி திருவேங்கிடத்துக்குத் தன் குடும்பத்தின் நிலையை யாரும் கூறவில்லை. யாருக்கு என்ன அக்கரை! அவன் ஒரு நாள் அன்போடு, உபசரித்தான் ஒரு ஆண்டியை! அந்த ஆண்டி மாறுவேடத்திலே வந்திருந்த இலட்சாதிகாரி என்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. தனக்குக் கிடைத்த சோறு வேறொருவனின் பசியைத் தீர்க்க உதவட்டும் என்ற பெரிய தத்துவத்தையும் அவன் யாரிடமும் பாடங்கேட்டவனல்ல. அன்று அவனுக்குப் போதை! சோறு இருந்தது நிரம்ப, பசி இல்லை. பாதையிலே சுருண்டுக் கிடந்தான் ஒரு பரதேசி; தூக்கி எடுத்து வைத்துக்கொண்டு உபசரித்தான் திருவேங்கடம்.

பரதேசிக் கோலத்திலே பல ஊர் சுற்றித் தர்மவான்களின் தப்புலித்தனம், புண்ணியவான்கள் செய்யும் பாபச் செயல்கள், முதலிய லோக விசித்திரத்தைக் கண்டு அனுபவ அறிவு பெற்று வந்த அருமைநாயகம் பிள்ளை, பல இலட்சத்தைப் பாங்கியிலே வைத்திருந்தார். குடும்பம் கிடையாது. ஒரு ஆண்டிக்கு ஈரமுள்ள நெஞ்சு இருந்தது கண்ட அருமைநாயகம், அந்த ஆண்டிக்கே தன் சொத்து முழுவதையும் தந்துவிடுவது என்று தீர்மானித்து விட்டான். அதைச் சொன்னால் அவன் நம்ப மாட்டான் என்பதற்காகத் தன் எண்ணத்தைச் சொல்லவில்லை. தன்னுடன் வரும்படி கூறினான். 'வீடு நமக்கு நாடு முழுவதுமே; ஓடு உண்டு கையில்' என்ற விருத்தத்தைப் பாடியபடி சம்மதித்தான் திருவேங்கடம். இருவரும் பல ஊர் அலைந்துவிட்டு அருமைநாயகத்தின் ஊராகிய ஆற்றூர் வந்து சேர்ந்தனர். அந்த வேற்றூரிலே, தன் குடும்பம் இருப்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. யாருக்குத் தெரியும்! ஆற்றூரிலே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கையில், தனபாக்கியத்தைத் திருவேங்கடம் கண்டான். ஆச்சரியமடைந்தான், குடிசை சென்றான், சுந்தரியைக் கண்டான். தங்கராஜனைக் கண்டான். தகதகவென ஆடினான். சந்தோஷத்தால், மெல்ல மெல்ல விஷயத்தைத் தெரிந்து கொண்டான். அவன் மனம் துடித்தது.

"எங்கே இருக்கிறான் அந்தப் பாவி? அவன் கழுத்தை முறிக்கிறேன்."

"வேண்டாம் அவன் பெரிய பணக்காரன். உலகம் அவன் பக்கம் பேசும்."

"துறவிக்கு வேந்தன் துரும்பு. தெரியுமா? அவன் மனிதனாடி? இந்தச் சொர்ணவிக்கிரகத்தை அவன் கண்டானா? அவன் பணக்காரனானால் எனக்கென்ன பயமா? சீ! நான் எத்தனையோ பணக்காரன் பரதேசிப்பயலாகி விட்டதைப் பார்த்திருக்கிறேன் - இதோ இதே ஊரிலே இருக்கிறாரே அருமைநாயகம், இந்த ஆசாமி ஆண்டியாக இருந்தது எனக்கு தெரியும். பணமாம் பணம். அது என்னடி செய்யும்?"

திருவேங்கடம் தம் மனைவியிடம் இதுபோலச் சொல்லிக் கொண்டு இல்லை. மனதிலே எண்ணினான் பல. சொல்ல வாய் வரவில்லை.

திருவேங்கடத்தின் குடும்பத்தின் நிலைமையைத் தெரிந்து கொண்டார் அருமைநாயகம். நிர்க்கதியாகி நிந்தனைக்குட்பட்டுக் கிடந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் சக்தி தனக்கு இருந்ததற்காகச் சந்தோஷமடைந்தார். குடிசை காலியாகிவிட்டது. தங்கராஜன் பெரிய தாத்தா மடியில் கொஞ்ச நேரமும் சின்னத் தாத்தா தோளில் கொஞ்ச நேரமும் இருப்பான். கூத்தாடுவான், கூவுவான் - கண்டு களிப்பாள் சுந்தரி. மறுகணம் அவள் கண்களிலே நீர் பெருகும். ஏழ்மையிலே மூழ்கியிருந்த சமயத்திலாவது, சதா ஜீவனத்துக்கு வேலை செய்து கொண்டிருக்க வேண்டியிருந்ததால் விசாரப்பட நேரம் கிடைப்பதில்லை. அருமைநாயகத்தின் ஆதரவால் ஜீவனக் கஷ்டம் இல்லாமற் போகவே, சுந்தரிக்கு விசாரம் விடாத நோயாகிவிட்டது.

இலுப்பப்பட்டியார் இறந்தார். கனகனின் தகப்பனார் அவரைத் தொடர்ந்தார். காவேரி காசநோய்க்கு பலியானாள். கணவன் கப்பலேறினான். பர்மாவுக்குக் கடைக் கணக்கப் பிள்ளையாக! அக்கரையிலிருக்கிறான் சுந்தரியின் கணவன் என்று சொல்லி வந்த பொய்யே மெய்யாகிவிட்டது!

தங்கராஜனுக்கு வயது பத்தாகி விட்டது. அவனுக்குச் சொல்லவில்லை, தாயாரின் துயரத்தை. 'தகப்பன் அக்கரையிலே ஏன் இருக்கிறார். எவ்வளவு காலத்துக்கு இருப்பார்?' என்று அவன் கேட்கவில்லை. என்ன காரணத்தினாலோ, மனைவியிடம் சண்டையிட்டுவிட்டு, அவர் போய்விட்டார் என்று நம்பியிருந்தான்.

கணவன் வேலைக்கு அமர்ந்திருந்த கடையின் முதலாளி கொடுமைக்காரன். அவன் தந்த இடி பொறுக்கமாட்டாமல், கனகன் தாய்நாடு சென்று அன்னக்காவடியாகவாவது வாழலாம் என்று அக்கரையை விட்டு இக்கரை வந்தான். சுந்தரி இருப்பதை, அவனுக்கு யாரோ சொல்லியல்ல அவன் ஆற்றூருக்கு வந்தது. ஆற்றூரிலே அருமைநாயகம் என்பவர் ஆலை வைத்திருக்கிறார். அங்கு சென்றால் வேலை கிடைக்கும் என்ற செய்தி தெரிந்தது. வேலைக்காக அவர் வீடு வந்தான்.

கனகனுடைய வரலாற்றைக் கேட்டார் அருமைநாயகம்.

"நீதானா அந்த ஆசாமி! அட மடையனே. உன்னாலே நிராகரிக்கப்பட்ட பெண்ணிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொள்" என்று அவர் சொல்லவில்லை.

"உட்கார் தம்பி! உட்கார்! உன்னைக் காணப் பல நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தேன். இலுப்பப்பட்டி மிராசுதாரின் மருமகன் கனகு நீதானா? சரி, சரி! உட்கார்" என்று கூறினார், அருமைநாயகம். ஆச்சரியத்தால் திகைத்துப் போனான் கனகன்.

"தங்கம்! ராஜா! டே தம்பி தங்கராஜ்!" என்று அழைத்தார். "தாத்தா இதோ வந்தேன்" என்று கூவிக்கொண்டே ஓடி வந்தான் பையன்.

"உன் அப்பா வந்திருக்கிறார்" என்றார். கனகன் மிரண்டான். பையனின் கண்கள் அகன்றன. வாய் திறந்தபடி நின்றான். முகத்திலே ஓர் விவரிக்க முடியாத உணர்ச்சிக் குறி!

அடுத்த விநாடி "அப்பா!" என்றான். பாய்ந்தோடி கனகுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். கனகனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஐயா! இது என்ன? வேலை தேடிக் கொண்டு இங்கே நான் வந்தேன். இது யார்? இந்தச் சிறுவன் என் மகன் என்று கூறுகிறீரே. அவனும் 'அப்பா' என்று அழைக்கிறானே. இதென்ன விந்தை?" என்று கனகன் கேட்கவில்லை. அவனுடைய கண்களின் மிரட்சியைக் கண்டு அருமைநாயகம் சிரித்தபோது கண்கள் இப்படிக் கேட்க எண்ணுகிறான் என்பதை அவர் தெரிந்தே தான் சிரித்தார் என்பது தெரிந்தது.

அடுத்த விநாடி துள்ளி ஓடினான் தங்கம்.

"அம்மா, அம்மா, அப்பா, அப்பா, அப்பா வந்து விட்டார், ஓடி வா, சீக்கிரம் வா" என்று கூவினான். ஓடினான் வீட்டுக்குள் தாயைத் தேடிக்கொண்டு.

"அப்பா, அப்பா, அப்பா வந்துவிட்டார்." ஆம், ஆம். அவனுடைய செவிகளுக்கு அந்த மொழி எவ்வளவுதான் இன்பம் தந்தது. பல நாட்கள் மெல்லிய குரலிலே யாருக்கும் தெரியாதபடி, அவனாகக் கூறிக்கொள்வான். அப்பா, அப்பா, இல்லை, அப்பா இங்கே இல்லை, அப்பா வரவில்லை, அப்பா இன்னமும் வரவில்லை. இன்று அப்பா வந்துவிட்டார் என்று கூவினான். மான்போலத் துள்ளிக் குதித்தான். தங்கராஜனின் ஆர்ப்பாட்டத்தைக் கண்ட சுந்தரிக்குப் பயமாகிவிட்டது. அவனுக்குப் பித்தம் பிடித்து விட்டதோ என்று, தாயைக் கண்ட உடனே, கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் தங்கராஜ், கணவன் இருந்த அறைக்குள். வாயிற்படியருகே சென்றாள். உள்ளே இருந்த கனகன், "சுந்தரி" என்று கூவினான். இருவரிலே யார் முதலிலே பாய்ந்தது என்று தெரியமுடியாதபடி, ஒரு ஆனந்த அணைப்பு ஏற்பட்டது. ஒரு வயோதிகரும் ஒரு சிறுவனும் அங்கே இருப்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இருவர் விழிகளிலும் நீர் குபுகுபுவெனக் கிளம்பி வழிந்தது.

"சுந்தரி! சுந்தரி! கண்ணே சுந்தரி" என்று கதறினான் கனகு. முகத்தைத் தன் இரு கரங்களிலும் பிடித்துக் கொண்டு உற்றுப் பார்த்தான், அவள் கன்னத்திலே புரண்டோ டிய கண்ணீரைத் துடைத்தான். மீண்டும் அணைத்துக் கொள்ளச் சென்றான்; கழுத்திலே தாலி இருக்கக் கண்டான் பயந்தான். சுந்தரிக்கு முகத்திலே ஒரு குறுநகை பிறந்தது.

"தங்கம், சின்னத் தாத்தாவை அழைத்து வா" என்று கூறினாள். சிறுவன் ஓடினான். அவனைப் பின் தொடர்ந்து சென்றார் அருமைநாயகம். அரைமணி நேரம் யாரும் அந்த அறைப்பக்கம் போகக்கூடாது" என்று உத்தரவிட்டார். சுந்தரி தன் சரிதத்தைக் கூறி முடித்தாள் கனகனிடம். கணவன் தன் கதையைக் கூறினான். அவள் கட்டியிருந்த தாலியை முத்தமிட்டான்.

"அக்கரைக்குச் சென்றிருந்த சுந்தரியின் புருஷன் வந்து விட்டார்" என்று ஆற்றூர் வாசிகள் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு சுந்தரியின் சோகக் கதையின் சூட்சமப் பகுதியை யாரும் சொல்லவில்லை. தாய் கட்டிய தாலி. "அக்கரைக்கு போன அவள் புருஷன் வந்துவிட்டான். இனி இக்கரையிலே தான் இருப்பானாம்" என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள். அவன் கட்டாத தாலி இவள் கழுத்திலே இருந்தது யாருக்குத் தெரியும்? அவனுடைய அந்த நாள் நடவடிக்கையை யார் அவர்களுக்குச் சொன்னார்கள்?

சுந்தரி:- "தங்கம்! உங்க அப்பா ரொம்ப நல்லவரென்று எண்ணாதே! ஜாக்கிரதை. ரொம்ப ரொம்பக் கெட்டவர். அவர் என்ன செய்தார் தெரியுமா? சொல்லிடட்டுமா?"

கனகன்:- "சுந்தரி, சுந்தரி, சொல்லாதே சுந்தரி உனக்குக் கோடிப் புண்யம், அதை மட்டும் சொல்லாதே!"

தங்கம்:- "அம்மா, அம்மா, சொல்லம்மா! சொல்! அப்பா, அம்மா வாயை மூடாதே! அம்மா, சொல்லு!"

சுந்தரி:- "உங்க அப்பா என்ன செய்தாரு தெரியுமா! ஒருநாள்..."

கனகு:- "ஆ, அப்பா அடிவயிற்றிலே வலிக்குதே, அப்பப்பா, பொறுக்க முடியவில்லையே, தம்பி, ஓடிப்போய்க் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா."

(பையன் ஓடினதும் கனகன், சுந்தரியைக் கட்டித் தழுவிக் கொண்டு)

"சுந்தரி, கண்ணில்லே, சொல்லாதம்மா, தயவு செய்து, சொல்லாதே கண்ணு."

சுந்தரி:- "இப்படித் தளுக்கு செய்து விட்டுத் தானே என்னைத் தவிக்க வைத்து விட்டுப் போயிட்டிங்க முன்னே."

கனகன்:- "அதற்காகத் தீவாந்திர சிட்சையை அனுபவித்தாகி விட்டதே!"

சுந்தரி:- "ஐயோ! பாவம்! என்னாலே உங்களுக்கு இத்தனை கஷ்டம்."

(அறைக்கு வெளியே சிறுவன்)

தங்கம்:- "அப்பா! தண்ணீர்."

(அறைக்குள்ளே சுந்தரி)

சுந்தரி:- "விடுங்கள், வந்துவிடுவான்."

(உள்ளே நுழைந்த சிறுவன்)

தங்கம்:- "அப்பா வலி போயிடுத்து?"

சுந்தரி:- "ஓ! கிலியும் போயிடுத்து."

தங்கம்:- "நீ, என்னா புலியா, எங்க அப்பா கிலி அடைய. அது சரி, அம்மா! சொல்றேன் சொல்றேன்னு சும்மா இருக்கறயே, சொல்லம்மா!"

இந்த ரசமான நாடகம் அடிக்கடி நடந்தது. ஆனால் சுந்தரி ஒரு நாளாவது, தங்கராஜனுக்குக் காவேரியிலே ஸ்நானம் செய்த கனகனின் கதையை மட்டும் சொல்லவேயில்லை. எப்படிச் சொல்லமுடியும்!!

'கொக்கரகோ'

ஒரு நாள் மாலை, நான் கடற்கரை முன்பு கண் மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே!

"வைஸராயைப் பார்த்தாயோ, இல்லையோ?" என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண் விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக் கொண்டே நின்றான்.

"இல்லை, சுந்தரம். நீ பார்த்தாயோ?" என்று நான் வினவினேன்.

"அவர் என்னைப் பார்க்காமல் கூட இருப்பாரா? போன வாரத்தில் கூட, 'வீரர் வில்லிங்டன்' என்று முதல் தரமான தலையங்கமொன்று எழுதினேனே, தெரியாதா?" என்றான்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுந்தரம் டிப்டி கலெக்டராக இருப்பதாகச் சொன்னால் கூட நான் நம்பத் தயார். ஆனால், பத்திரிகாசிரியராக இருப்பதாகச் சொன்னபோது, கொஞ்சங்கூட நம்ப முடியவே இல்லை.

"தலையங்கம் யார் எழுதினது?" என்று நான் வினவினேன்.

"அரெரே! சமாசாரமே தெரியாதா?" என்று பீடிகை போட்டுக்கொண்டு, சுந்தரம் தன் சுய சரிதையைத் தொடங்கினான். அதற்குள் எனக்கு அறிமுகமான ஒரு பேர்வழி அவ்வழியே போக, நான் அவருக்கு ஒரு சலாம் போட்டுக் கொஞ்சம் பற்களை வெளியே காட்டினேன்.

"யார் அந்த ஆசாமி?" என்று கேட்டான் சுந்தரம்.

"கரன்சி ஆபீசில் 600 ரூபாய் சம்பளத்தில் இருக்கிறார். அவர் பெரிய பேர்வழி" என்றேன்.

"உஷ்! இவர்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை" என்று கூறிக் கொண்டே, அந்த உத்தியோகஸ்தர் போன திக்கை நோக்கிச் சுந்தரம் காறி உமிழ்ந்தான்.

"கொடுத்துவைத்த ஆசாமிகள்! அந்தக் காலத்திலே சுலபமாக அகப்பட்ட வேலையின் பயனாக இன்று கொழுத்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்தக் காலத்திலே வேலை ஏது? வெட்டி ஏது? இருக்கும் பணத்தையும் படிப்பிற்கு அர்ப்பணம் செய்துவிட்டு, வறட்டு நிலம், முரட்டு மனைவியுடன் காலக்ஷேபம் செய்வது எவ்விதம் என்ற கவலை எனக்கு உண்டாயிற்று. வெகு நேரம் வேதனைப் பட்டுக் கடைசியில் பத்திரிகாசிரியர் ஆகலாம் என்று தீர்மானித்தேன்."

சுந்தரம் இந்த இடத்தில் தன் சரிதத்தைச் சற்று நிறுத்திவிட்டுக் கொஞ்சம் பொடி போட்டுக் கொண்டான். அவன் திடீரென்று எப்படி மேதாவியானான் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மறுபடி ஆரம்பித்தான் கதையை.

"எவ்வளவோ பத்திரிகைகள்! எங்கே திரும்பினாலும் பத்திரிகைகள்! இருந்தாலும், என் பத்திரிகையின் பெயரைக் கேட்டாலுமே போதும், உன்னால் அதை வாங்காமலிருக்க முடியாது. நல்ல சுப தினமாகப் பார்த்து அதை ஆரம்பித்தேன். தாளின் தலையிலே ஒரு சேவல்! அதன் வாயின்றும் வருகிறது 'கொக்கரகோ' என்னும் சப்தம். அதுவே பத்திரிகைக்கும் பெயர். சப்தச் சுவை ஒரு பக்கம் கிடக்கட்டும்... அதில் வெளியாகும் விஷயங்களின் பொருட்சுவையின் நயத்தை என்னால் சொல்ல முடியாது."

"சுந்தரம், ஒரு கேள்வி. அது என்ன, மாதப் பத்திரிகையா, வாரப் பத்திரிகையா அல்லது தினசரியா?" என்று நான் கேட்டேன்.

"அதை நான் ஏன் கூற வேண்டும்? விஷயம் முழுவதையும் கேட்டு விட்டுப் பிறகு நீயே சொல்லு! மற்ற பத்திரிகை ஆசாமிகளைப் போல ரிசர்வ் பாங்கி மசோதா, வெள்ளைக் காகிதத் திட்டம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், சாஸ்திரியார் சாசனம் என்றெல்லாம் நான் எழுதுவது கிடையாது. 'கொக்கரகோ'வில் வெளிவரும் முக்கியமான விஷயங்கள் என்னவென்றால் திடுக்கிடும் சம்பவங்கள், ஆவேசத்தைத் தரக்கூடிய ஆச்சர்ய மர்மங்கள், விநோத விசித்திரங்கள்தாம். ஆனால், ஓரொரு சமயம் பல சிக்கலான பிரச்னைகளைப் பற்றிக் கூட நான் விவாதிப்பதுண்டு.

உதாரணமாக 'மனிதனுக்கு ஒரு தலை போதுமா?' என்ற தலைப்பின் கீழ் ஒரு ரசமான கட்டுரை எழுதியிருந்தேன். இவ்விஷயமாக இதுவரை ஒருவரும் கவனியாது இருப்பது சுத்தப் பிசகென்றும், அறிவுள்ளோர் இதன் உண்மையைத் தெரிந்துகொண்டு பாமரருக்குக் கூறவேண்டும் என்றும் ரெவரண்டு ராம்சிமித் பிரசங்கம் செய்ததாக எழுதிவிட்டேன். அவ்வளவுதான், அந்த வாரம் பூராவும் அதைப் பற்றி விருத்தி உரைகளும் வியாக்கியானங்களும் ஆராய்ச்சிகளும் 'கொக்கரகோ'வில் வெளிவந்தன. பிறகு..."

"ஆமாம் சுந்தரம், ராம்சிமித் யார்?" என்று நான் கேட்டேன்.

சுந்தரம் கதை சொல்லும் உற்சாகத்தில், என் கேள்வியைக் கவனிக்கவேயில்லை. மேலே சொல்லிக்கொண்டே போனான்.

"மறுவாரம் 'மன்னிக்கவும்' என்ற தலைப்பின் கீழ், ராம்சிமித் 'மனிதனுக்கு ஒரு தலை போதுமா?' என்ற பிரச்னையைக் கிளப்பவே இல்லையென்றும், 'மனிதனுக்கு இருக்கும் ஒரு தலையே போதும், இதை அறிவுள்ளோர் கவனித்துப் பொதுமக்களுக்குக் கூறுவது நலம்' என்று மட்டுமே அவர் கூறினதாகவும் வெளியிட்டு, தப்பாகச் செய்தி அனுப்பின நிருபரை வேலையை விட்டு விலக்கிவிட்டதாகக் 'கொக்கரகோ'வில் பிரசுரம் செய்தேன்."

எனக்குச் சிரிப்புப் பொங்கிற்று. சுந்தரம் அவ்வளவு சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

"பேஷ்! பேஷ்!" என்று சொல்லிக் கொண்டே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தேன். "தட்டுவது பிறகு ஆகட்டும், சங்கரா! விஷயத்தைக் கேள்" என்று சுந்தரம் கதையை மேலே சொல்லத் தொடங்கினான்.

"தத்தி விளையாடி, குழந்தைப் பருவத்தைக் கடந்து, 'கொக்கரகோ' வாலிபப் பருவத்தை அடைந்தது. பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் 'கொக்கரகோ'வைப் பார்க்காமல் தூங்குவதில்லை. நானும் விநோத விஷயங்களை வெளியிட்டவண்ணமாகவே இருந்தேன். அதற்காக நான் செய்த யுத்திகள் எவ்வளவு! ஒரு தினம் விந்தையான விஷயம் ஒன்றும் அகப்படவில்லை. ஒரு பக்கம் கூட அச்சாகவில்லை. மணியோ மூன்று, நான்கு என்று வளர்ந்து கொண்டே சென்றது. ஐந்து மணிக்கெல்லாம் பத்திரிகை அச்சடித்தாக வேண்டும். என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்று சுந்தரம் கேட்டான். ஆனால், நல்ல காலமாக என் பதில் வருமுன்னமேயே தன் சரிதத்தை ஓட்டினான்.

"கேள் சங்கரா! சுற்றி வளைத்துப் பார்த்தேன். திடீரென்று ஒரு யுக்தி கிளம்பிற்று. எடுத்தேன் பேனாவை. 'ஹிட்லர் பட்லரானால்?' என்று கேள்வி ஒன்று கிளப்பினேன். மறுதினம், எனது சித்திரக்காரரைக் கொண்டு ஹிட்லருக்குப் பட்லர் வேஷம் போட்டு, அவர் ஐரோப்பாவிற்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு போவது போலவும், சாப்பாட்டுப் பண்டங்கள் துப்பாக்கி, பாம், புகை முதலியவைகளாகவும் ஒரு படம் பிரசுரம் செய்தேன்.

விற்பனை பலத்தது. 32 பி.ஏ.-க்களை நிருபர்களாகவும், பார்சல் குமாஸ்தாக்களாகவும் வைத்துக் கொண்டேன். நீயும் வருவதானால் 33 பி.ஏ.-க்களுக்கு நான் தலைவனாவேன். என் மனைவி மரகதம், பெண்கள் பகுதியை வெகு திறமையாக நடத்திக் கொண்டு வந்தாள். ஓர் அழகிய, சிறிய பங்களாவை விலைக்கு வாங்கி அதில் குடியேறினேன். அடுத்த பங்களாவில் கார்த்திகேயன் அடியார் கூட்டத் தலைவரும், கங்காணிகள் சங்கத்துப் பொக்கிஷதாரருமான ஸ்ரீமான் கருணைப்பிள்ளை, தம் மனைவி கமலாம்பிகையுடன் கூடி வசித்து வந்தார். பலமுறை நான் அவரை அணுகி, 'என் பத்திரிகையைப் பற்றி உம் அபிப்பிராயம் என்ன? அதற்கு ஏதாவது விஷயம் தரக்கூடாதோ?' என்று கேட்டுக்கேட்டு, என் பாடு போதுமென்றாகிவிட்டது. எத்தனையோ பெரிய ஆசாமிகள் விஷயதானம் செய்திருக்கிறார்கள். இந்தக் கருணைப்பிள்ளைக்கு மட்டும் ஏன் கடுகளவு கருணையாவது இருக்கக்கூடாதென்று எண்ணி ஏங்கினேன். ஆனால், விட்டேனா ஆசாமியை! மரகதமும் நானும் கலந்து யோசித்து, அவரைத் தண்டிக்க ஓர் ஏற்பாடு செய்தோம்.

ஏற்பாட்டின்படி, கமலாம்பிகையை என் மனைவி சிநேகம் செய்துகொண்டாள். ஒரு தினம் இருவரும் வழக்கம் போல் சந்தித்து வம்பளந்து கொண்டிருந்தனர். இருந்தாற்போலிருந்து மரகதம் விழுந்து விழுந்து சிரித்தாள். கமலாம்பிகையின் முகத்தில் அசடு தட்டிற்று. 'ஏன் சிரிக்கிறாய்? காரணத்தைச் சொல்லிவிட்டுச் சிரிக்கக்கூடாதோ?' என்று கெஞ்சினாள். மரகதம் சிரிப்பை நிறுத்திவிட்டு, 'ஒன்றுமில்லை, என் வீட்டுக்காரர் என்னிடம் அதிக அன்புள்ளவர். நான் சொல்வதைத் தட்டுவதே கிடையாது. நேற்று நான் வேண்டுமென்றே அவருடைய அன்பைச் சோதிக்க எண்ணி ஒரு பாவாடையைக் கட்டிக் கொண்டு நடனம் செய்யச் சொன்னேன். அவரும் தடை சொல்லாது ஆடினார். ரொம்பத் தமாஷாக இருந்தது. அதை நினைத்துக் கொண்டுதான் சிரிக்கிறேன்' என்று கூறினாள்.

அன்று மாலை, நான் ஆபீசிற்குச் செல்லாது கருணைப்பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் காமிராவுடன் ஒளிந்து கொண்டிருந்தேன். அவரும் அவர் மனைவியும் தோட்டத்திற்கு வந்தனர்.

'இது என்ன முட்டாள்தனம்! ஆசையிருந்தால் ஆடவேண்டுமா?' என்று பிள்ளை கேட்டார். கமலாம்பிகை கண்களைப் பிசைந்து கொண்டே, 'ஆமாம், ஆடு என்றால் ஆடத்தான் வேண்டும்; பாடு என்றால் பாடத்தான் வேண்டும். பக்கத்து வீட்டு ஆசிரியர் முட்டாளா? அவருடைய மனைவி அவரை ஆடச் சொன்னாள். அவர் ஆடினார். கொடுத்து வைத்த புண்ணியவதிகளுக்கு மனங்கோணாது நடக்கும் புருஷர்கள் வாய்க்கிறார்கள்' என்று கூறிக்கொண்டே, விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.

'சரி' என்று சொல்லி கருணைப்பிள்ளை ஒரு பாவாடை தரித்து வந்து நடனம் செய்தார்.

நடனம் மிக அற்புதமாக இருந்தது. கறுத்துப் பெருத்த உருவம், உருண்டைத் தொந்தி, மொட்டைத் தலை... நடனம் நன்றாகத்தானே இருந்திருக்கும்!

நான் மறைந்திருந்து அவர் ஆடியதைப் போட்டோ பிடித்துக் கொண்டு, பிறகு அவர் எதிரில் திடீரென்று வந்தேன்.

'பரத நாட்டியத்தைப் பற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?' என்று நான் கேட்டேன். ஆள் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார். அன்றைய 'கொக்கரகோ'வில்...


கருணைப்பிள்ளை நர்த்தனம்

பரதநாட்டியம் ஒரு பழங்கலை

என்று தலைப்பு போட்டு, கருணைப்பிள்ளையின் போட்டோவையும் பிரசுரம் செய்தேன். அன்று என்னமோ எனக்கு ஒரு விந்தையான ஆசை ஏற்பட்டது. நமது பத்திரிகையை நாமே விற்க வேண்டுமென்று தோன்றிற்று.

உடனே, மாறுவேடம் பூண்டு, பிராட்வே முனையில் நின்று கொண்டு, 'கொக்கரகோ - காலணா' என்று கூவிக் கூவி விற்றேன்..."

"சுந்தரம்! நிறுத்து, நிறுத்து! உன் சரிதம் கிடக்கட்டும். அந்த மாதிரிப் பத்திரிகையை நான் பார்த்ததே இல்லையே; கேள்விப்பட்டது கூட இல்லையே" என்று நான் கேட்டேன்.

"நீ எப்படி பார்த்திருக்கமுடியும்? இந்த ஊரில் போட்டால்தானே உனக்குத் தெரியப் போகிறது?" என்றான் சுந்தரம்.

"இந்த ஊரில் போடவில்லையா? எந்த ஊரில் போடுகிறாய்?" என்று நான் வினவினேன்.

"உங்களுக்குத் தெரியாதா கீழ்ப்பாக்கம் பத்திரிகாசிரியரை?" என்று பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு போலீஸ்காரன் என் நண்பன் கரத்தைப் பற்றிக் கொண்டான். என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அவனை இழுத்துக் கொண்டு போனான்.

"சங்கர், வைஸராய் ஏதோ பேச வேண்டுமென்று கூப்பிட்டனுப்பி இருக்கிறார். நான் போய்விட்டு, நாளை மாலை உன்னைப் பார்க்கிறேன். இன்றைய 'கொக்கரகோ'வை அவசியம் படி" என்று கூறினான் சுந்தரம்.

பரிதாபம்! என் நண்பன் சுந்தரம் இரண்டு தரம், வார மும்முறைப் பத்திரிகை நடத்தித் தோல்வியடைந்து, பிறகு மாதமிருமுறை பத்திரிகை போட்டு மூளை இழந்து, கடைசியில் பைத்தியக்காரனாகிக் கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் விஷயம் எனக்கும் பிறகே தெரியவந்தது.

வாழ்க்கை வழிகாட்டி

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெயருடன் தென் ஆப்பிரிக்காவிலே முரட்டு வெள்ளையர்களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடத்திய காலத்திலும் நாட்டுத் தலைவராகி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின்போதும் சிறைச்சாலையிலேயும் நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மையை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்தபோதும் வெறியன் வெடிகுண்டு வீசியபோதும் ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துகளிலிருந்தும் அவர் தப்பினார். "ஒவ்வோர் சமயமும் அவர் உயிருக்குப் பேராபத்து வந்துவிடுமோ?" என்று நாடு கலங்கிற்று.

எதிர்பாராத ஆபத்து எவரும் கனவும் கண்டிராத விதத்தில் ஏற்பட்டு அவர் உயிர் துறக்க நேரிட்டது கயவனின் கைத்துப்பாக்கியினால்.

இந்து மார்க்கத்தின் மாசு துடைத்து, அதற்குப் புதிய மாண்பு ஏற்படுத்துவதற்காகவும் அந்த மார்க்கத்தை சூதுக்கும் சுயநலத்துக்கும் ஆதிக்கத்துக்கும் சிலர் பயன்படுத்திக்கொள்ளும் கொடுமையை நீக்குவதற்காகவும் பாடுபட்டவர்களை அந்த மதத்தைக் கெடுக்கிறவர்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு கேவல புத்தி படைத்தவர்கள் கருத்து வேற்றுமையைச் சாக்காகக்கொண்டு காட்டுமிராண்டித்தனத்தைக் கையாண்டு படுகொலை பல செய்துள்ளனர். மதச் சீர்திருத்தவாதிகளின் வரலாறுகள் இத்தகைய சோகச் சம்பவங்களையே நிரம்பக் கொண்டவையாக இருக்கக் காணலாம்.

இந்து மார்க்கத்துக்கு அவர் செய்ய எண்ணிய திருத்தங்களை மத வெறிகொண்டோரும் ஆதிக்கக்காரர்களும் விரும்பவில்லை.

சில காலமாகவே வடநாட்டிலே சில பத்திரிகைகளில் காந்தியார் மீதும் அவர் சகாக்கள் மீதும் பலாத்கால வெறிச் செயல்களைத் தூண்டும் முறையிலேயே கூட எழுதப்பட்டு வந்தன.

அவருடைய மாலை நேரப் பிரார்த்தனைக் கூட்டங்களிலே சென்று கலகம் விளைவிக்கவும் அவர் இந்து மார்க்கத்தைக் கெடுக்கிறார் என்று கூச்சலிடவும் செய்தனர்.

இரண்டோர் நாள், Font sizeஇந்தச் செயல்களின் காரணமாக அவருடைய பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறாமலே கூடப் போயின.

ஒவ்வொரு பிரார்த்தனைக் கூட்டத்திலும் அவர் இந்தத் தவறான போக்கை விளக்கி அன்பும் விவேகமும் மலர வேண்டும் என்று அறிவுரை கூறியபடியே இருந்தார்.

அதே முறையிலே தமது அரிஜன் பத்திரிக்கையிலும் எழுதிக்கொண்டிருந்தார். தமது நோக்கத்தின் தூய்மையை விளக்கி வந்தார்.

காந்தியைக் கொன்ற வெறியர்கள்

வெறியர்கள் திருப்தி கொள்ளவில்லை. வெளிப்படையாகவே இது தெரியலாயிற்று.

சின்னாட்களுக்கு முன்பு அவர் நாட்டு மக்களின் அகத்தூய்மையைக் கோரி, உண்ணாவிரதமிருந்தார். ஆபத்தான நிலை. அந்த சமயத்திலே அவர் தங்கிருந்த பிர்லா மாளிகை முன் ஒரு சிறு வெறிக்கும்பல் கூடி 'அவர் சாகட்டும்' என்று கூவிற்று. அது சமயம் அங்கு வந்திருந்த பண்டித நேரு பதறிப்போனார். அந்தக் குப்பலைக் கண்டித்து துரத்தினார்.

பிறகோர் நாள், பிரார்த்தனைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் வேறோர் பித்தன் வெடிகுண்டு வீசினான்.

அதற்குப் பிறகோர் நாள், பண்டித நேருவின் கூட்டத்தில் வெடிகுண்டும் கையுமாக மற்றொருவன் பிடிபட்டான். அவன் ஒரு சீக்கியன் என்று செய்தி கிடைத்தது.

இவைகளுக்கெல்லாம் முன்னே, அன்பர் ராஜகோபாலச்சாரியாரின் மோட்டார் மீது எவனோ ஒருவன் சுட்டிருக்கிறான்.

இந்தக் கோரக் கொலை நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, பிர்லா மாளிகையிலே அவர் தங்கியிருந்த அறையின் பக்கம் எவனோ ஒருவன் நுழைந்து, "யார்? என்ன?" என்று கேட்டபோது பேந்தப் பேந்த விழித்தான் என்று சேதி வந்தது.

இப்படிப் பலவிதமான முயற்சிகளைச் செய்து வந்தனர் பாதகர்கள்.

கடைசியில், பிரார்த்தனைக் கூட்டத்தில் அவருக்கு எதிரே நின்று, திரளான மக்கள் கூடியிருந்த மன்றத்தில், கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டான் காதகன்.

இத்தகைய படுகொலைகள் மூலம் ஆதிக்கத்தைப் புகுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் வேலை செய்யும் ஒரு சதிகாரக் கும்பல் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. சர்க்கார் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதுடன் நாடெங்கும் எவ்விதமான நிலைமையையும் சமாளிக்கத்தக்க முன்னேற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இந்தத் துக்ககரமான சம்பவத்தால் நாடு தன் நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்பதுதான் நானிலமெங்குமுள்ள நல்லறிவாளர்களின் வேண்டுகோள்; அறவுரை.

சதிச்செயலைக் கண்டுபிடித்து, அவர்களைச் சட்டம் தண்டிக்கும். சர்க்காருக்கு அதற்கான சக்தியும் திறமையும் இருக்கிறது. நமது ஒற்றுமையுடன் கூடிய நிலை அதற்குப் பக்கபலமாக நிற்க வேண்டும். ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையைப் பெற்று அந்த சாசனத்தைத் தயாரிக்கும் அரும்பணியிலே ஈடுபட்டு அமைச்சர்கள் தமது அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் சுழல் துப்பாக்கியைக்கொண்டு அவ்வளவு பேரையும், ஏழு அமைச்சர்களையும், சுட்டுக் கொன்றான் பர்மாவில் சில காலத்துக்கு முன்பு. இன்றும் குண்டு பாய்ந்த அந்தச் சடலங்களை வைத்துக்கொண்டுள்ளனர். அமைச்சர்களை, அவர்களின் தலைவர் அவுங்சானைச் சுட்டு வீழ்த்தினால் அரசு கவிழ்ந்துவிடும் என்று அறிவிலிகள் எண்ணினர். ஆனால் பர்மா நிதானம் தவறாமல், துக்கத்திலே தன் மனதைப் பறிகொடுத்துவிடாமல், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கடமையைச் செய்து வருகிறது. அது நம் அண்டை நாடு. சிறிய நாடுதான். அந்தச் சிறிய நாடு காட்டிய பெரிய உறுதி நமக்கும் வேண்டும். மனக்குழப்பம் மனமாச்சரியம் எழக் கூடாது. உலகின் கண்கள் நம் மீது பாய்ந்துள்ள நேரம். உரிமை கிடைத்துள்ள வேளை. உலுத்தர் சிலரின் செயலால் உள்ளம் கெட்டுவிட இடந்தராமல் உறுதியுடன் நின்று நாட்டுநிலையைக் காப்பாற்றுவோமாக!


(காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட 30.1.1948ஆம் நாள் எழுதப்பட்டது)